வெள்ளி, 11 அக்டோபர், 2013

தலையங்கம்-கொங்குதமிழர்பேரவை


எமது கொங்குதமிழர்பேரவையின் சார்பில் காங்கயம்வட்டம்,சிவன்மலையில் அமைந்துள்ள தீரன்சின்னமலையின் பட்டாலிப்போர்ப்பாசறை நினைவாக,தைப்பூசத்தேர்திருவிழா அன்று-2002ம் ஆண்டு முதல்-2009ம் ஆண்டு வரை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. 

2008ம் ஆண்டு நடத்தப்பட்ட நிகழ்வில் வெளியிடப்பட்ட நினைவு மலரில் பதிவு செய்யப்பட்ட தலையங்கம் பகுதியை சுருக்கமாக கொடுத்துள்ளேன்.இதில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துரைகள் 2008ம் ஆண்டு சூழலுக்கு ஏதுவாக எழுதப்பட்டது.நடப்பு நிலைக்கு அது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாம் ஆண்டு தீரன்சின்னமலை பட்டாலிப்போர்ப்பாசறை வீரவழிபாட்டு விழாவின் நினைவு மலரில் உங்களை சந்திப்பதில் எமக்கும் எமது கொங்கு தமிழர் பேரவையின் தோழர்களுக்கும் மகிழ்ச்சி.

ஒரு காக்கிச்சட்டை,ஒரு கதர்சட்டை,ஒரு கருப்புச்சட்டை இந்த மும்மூர்த்திகளால் சமூகநீதி மறுக்கப்பட்டு அநீதிக்கு ஆளான எமைப்போன்ற இளைஞர்களால் இளைத்தவனுக்கு ஒரு நீதி!வலுத்தவனுக்கு ஒரு நீதியா? நீதி என்பது சமமானது! அனைவருக்கும் பொதுவானது! மரணம் ஒருமுறை நீதிக்காக மல்ரட்டும்! என்ற முழகத்துடன் கொங்கு தமிழர் பேரவை புரட்சிப் பயணம் தொடங்கிய ஆண்டு 2001.

இன்றைக்கு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் எமது கொங்குதமிழர் பேரவையின் சாதனைகளை எந்த நிலையிலும் விளம்பரம் செய்து வியாக்கியானம் பாடவில்லை.எந்த ஒரு இயக்கமும் தாம் கடந்த வந்த பாதைகளை வரலாற்றில் பதிவு செய்து பட்டியல் இடவேண்டும் என்ற சான்றோர் பெருமக்களின் அறிவுரையின்பேரில் கொங்குதமிழர்பேரவை கடந்த வந்த பாதைகள் எனும் தலைப்பில் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடி நீதியை வென்றெடுத்த சில நிகழ்வுகளை இந்த மலரில் பதிவு செய்து உள்ளோம்.

தீரன்சின்னமலையின் கொங்குபடைக்கு யுத்ததளவாடங்களை உருவாக்கும் பட்டறையாகவும்,போர்வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூடாரமாகத்திகழ்ந்த பட்டாலிப்போர்ப்பாசறை சிவன்மலை அனுமந்தராயர் சுவாமி திருக்கோவிலின் வடபுறம் அமைந்துள்ளது. போர்ப்பாசறையின் நினைவாக தைப்பூசத் தேர்த்திருவிழா அன்று விழா எடுத்து சின்னமலையின் வரலாற்றுச் சுருக்கத்தை மலராக பதிவுசெய்து சமுதாயத்தலைவர்களை அழைத்து வெளியீடு செய்து சிறப்பித்து வருகிறோம்.விழாவில் கிராமப்புறப்பள்ளி மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திறன் ஆய்வுப்போட்டிகளை தொடர்ந்து நடத்தி பரிசுகளையும்,சான்றுகளையும் வழங்கி மாணவச்செல்வங்களை ஊக்குவித்து வருகிறோம்.

கொங்கு சமூகம் எங்கு செல்கிறது? நமக்கு நாமே சுய ஆய்வு செய்து சில கருத்துக்களை பரிமாறி உள்ளோம். இவற்றின் ஊடாக பொதிந்த கருத்துக்களின் கூர்மை சிலரது மனதை புண்படுத்தும்.ஏனெனில் அவர்கள் கொங்கு சமூகத்தை புண்ணாக்கி,புரையோடச்செய்த இழி செயல்களை,நமக்கு,நாமே இழைத்துக்கொண்ட வன்கொடுமைகளை, புரிதலின் பாதையில்,புதிராகச்செல்லும் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டி உள்ளோம். சமூகப் போராளி என்ற பெயரில் கபட வேடமிட்டு களவு செய்யும் ஒரு சில கயவர்கள் திருந்த வேண்டும்.இல்லையெனில் வருந்தி விலக வேண்டும்.

சமூகத்தலைவர்கள் சுட்டெரிக்கும் சூரியனாக, குமுறும் எரிமலையாக, சுழலும் சுனாமியாக,பாயும் புலியாக,வாழும் தீரன்சின்னமலையாக வளம் வரவேண்டும்.பணத்தாலும்,பகட்டான மகிழ் ஊர்திகள்சூல பவனி வருவதால் மட்டும் தலைவர்கள் ஆகிவிடமுடியாது.

தீரன்சின்னமலை,மகாத்மா,நேதாசீ,வீரசவார்கர்,தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,காமராசர்,ராசாசீ,கோவை செழியனார் இன்னும் எண்ணற்ற பல தலைவர்களின் வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால் தீர்க்கதரிசனம்,எளிமை,எளியோரிடம் அரிதாரம் பூசாதஉறவு,வறுமை,தியாகம்,கடின உழைப்பு,என எண்ணிலடங்காப் பண்புகளை தன்னகத்தே உயர்த்தி பிடித்தவர்கள்.மேலும் மனிதர்களை கடந்த மகத்தான காந்த ஆற்றல்களையும்,இயற்கையின் நிர்மான சக்திகளையும் தமது ஆழ்மனதில் பிறப்பின் ஊடாக வார்த்து எடுத்தவர்கள்.

மலைக்கவைக்கும் எண்ண ஆற்றல்களையும்,திகைக்கவைக்கும் தியாகங்களையும்,மரணத்தை முத்தமிடும் துணிவைக்கொண்ட களப்போராளிகள் மட்டுமே மனிதன் தோன்றிய காலம்முதல் இன்றுவரை தலைமைப்பொறுப்பில் அமர்ந்துள்ளார்கள்.

இன்று தலைமை என்பது தற்குறிகளின் கூடாரமாகவும்,சமூகத்தை அடகுவைத்து நூற்றுக்கணக்கான கோடிகளில் புரளும் புரட்டுவாதிகளின் புகலிடமாகவும்,வேளீர்சமூகத்தின் வேந்தர்கள் என்றும்,வேங்கைகள் என்றும்,சமூகத்திற்கு வெட்டி முறிப்பவர்கள் என்றும்,மேடைகளில் மார்தட்டி நடிகைகளின் முந்தானையில் முகம் துடைத்து,அயல்நாட்டு மதுபானங்களில் மூழ்கி,சூதாட்டத்தில் சுற்றித்திரிந்து உல்லாசமோகங்களில் சல்லாபக் கூத்தாடும் பொல்லாவிகளே நீங்களா கொங்கு சமூகத்தின் தலைவர்கள்? நமது சமூகத்தின் இளையபாரதம் இளஞ்சிரிப்புடன் ஒருசில தலைமைக் கூத்தாடிகளின் தள்ளாட்டத்தைக்கண்டு வெட்கி தலைகுனிந்து விலகிச்செல்கிறது.

மேற்கண்ட செய்திகள் நமது சமூகத்தின் மேல்தட்டு,நடுதட்டு,கீழ்தட்டு மக்களிடம் ஆய்ந்தபோது கிடைத்த அதிர்ச்சியான தகவல்கள்.

விரல்விட்டும் எண்ணும் வகையில் ஒருசிலர் செய்த தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டி உள்ளோம்.யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது நமது நோக்கமல்ல.அந்த ஒரு சிலரும் திருந்தி சிறப்புடன் செயல்பட்டால் நாம் பாராட்டி,வாழ்த்தி எழுதத்தயாராக இருக்கிறோம்.

சிவன்மலையை சுற்றி தீரன்சின்னமலையின் நினைவுகள்,கொங்கு சூரியன்,சிவன்மலை முருகனின் தெய்வத்தளபதி தீரன்சின்னமலை எனும் தலைப்புகளில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக 21 ஆயிரம் பிரதிகளை சிறப்பு மலராக தயாரித்து இலவசமாக விநியோகித்து வருகிறோம்.

கருத்துகள் இல்லை: